வியாழன், 11 அக்டோபர், 2012

தாய் பால் அதிகம் சுரக்க பூண்டு சாப்பிடுங்க


குழந்தைக்கு பாலூட்டுதல்

இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். 

மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது, கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டல் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் நன்மை தரக்கூடியது. பாலூட்டுதல் தாய்மார்களுக்கு ஒரு சுகமான அனுபவமாக இருப்பதோடு, குழந்தையுடனான பிணைப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.
பால் புகட்டலில் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
குழந்தைக்கு பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்பது சிலரின் குறையாக இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பிலேயே வாயில் வைக்கும் எதையும் உறிஞ்சும்(சப்பும்) குணம் இருக்கும். சில குழந்தைகள் விதிவிலக்காக ஆரம்பத்தில் தடுமாறலாம். ஆனால், பழக்கத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடும். பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்று தொடர்ந்து வேறு வழிகளில் பால் புகட்டக்கூடாது. தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் குழந்தைகள் பாலை உறிஞ்சுக் குடித்தல் அவசியமான ஒன்று. எனவே, பால் புகட்டலை பழக்கத்தில் உண்டு செய்யவேண்டும்.
நிறைய பேரின் மற்றொரு கவலை, பால் பற்றவில்லை என்பது. தாய்ப்பால் சுரக்க என்ன வழி என்ற கேள்வியை அனைவரிடமும் கேட்டு கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்றவர்கள் அனைவரும் தங்களது உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் சாப்பிடும் உணவே பாலாக குழந்தைக்கு செல்கின்றது என்பதையும், அது நல்ல உணவாக இருக்க வேண்டும் என்பதிலும் நிறைய அக்கறை காட்ட வேண்டும்.

சத்தான உணவுகள், எண்ணெய், காரம் குறைவான உணவுகள் எடுத்துக்கொள்ளுதல் நலம். வழக்கமாய் சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் பருப்பு சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன் நிறைய சாப்பிடலாம். ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவை சாப்பிடுவதும் பால் சுரப்பிற்கு உதவிடும். பால் சுறா மீன் அல்லது கருவாடு சமைத்து அடிக்கடி சாப்பிடவும். பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதும்
பால் அதிகம் சுரக்க வழி செய்யும். பூண்டினை நறுக்கி நெய்யில் வறுத்து, சிறிதளவு சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர தினமும் குறைந்தது முக்கால் லிட்டர் பசும்பால் குடித்தல் வேண்டும். பாலுடன் மதர் ஹார்லிக்ஸ் போன்ற மாவுக்களை கரைத்து குடித்தல் இன்னமும் சிறப்பானது.

பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
எப்போதும் உட்கார்ந்த நிலையில் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் இருப்பதால், தாயும், குழந்தையும் அப்படியே உறங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் பால் குழந்தையின் மூக்கில் ஏறி, விபரீதங்கள் உண்டான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. பால் கொடுக்கும்போது தாயானவள் கண்டிப்பாக உறங்கக்கூடாது. அதேபோல் குழந்தை பால் குடிக்கும்போது உறங்கிவிட்டால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி, தூங்க வைக்கவேண்டும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், சில காலத்திற்கு குழந்தையை தூக்கி பால் கொடுத்தல் இயலாது. இவர்களுக்கு படுத்த நிலையில் பால் கொடுத்தல்தான் எளிதானது. அப்படி கொடுக்கும்பட்சத்தில், மேலே சொன்ன விசயங்களில் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, கூடிய விரைவில் அந்த பழக்கத்தில் இருந்து மாறுதல் வேண்டும்.


7 கருத்துகள்: