புதன், 17 அக்டோபர், 2012

வைரமுத்து

வைரமுத்து வாழ்க்கை குறிப்பு 
கவிப்பேரரசு வைரமுத்து 1953-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டி என்னும் கிராமத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

தந்தை பெயர்: திரு. இராமசாமித் தேவர்
தாயார் பெயர்: திருமதி. அங்கம்மாள்

கிராமத்தின் இயற்கை நேசத்திலிருந்து இவருக்குக் கவிதை எழுதும் ஆர்வம் பிறந்தது. பன்னிரெண்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றார். வடுகப்பட்டியில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியம் பயின்று கல்லூரியிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 'தங்கப்பதக்கம்' பரிசு பெற்றார். மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையை நோக்கிய பரிணாமம் இவர் பயணம். தமிழ்நாட்டின் புதுக்கவிதை முன்னோடிகளின் ஒருவர். கல்லூரிப் பருவத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பல கவியரங்கு மேடைகளில் பங்குபெற்று கவிதைத் துறையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தார். 19-ஆம் வயதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும்போது இவருடைய முதல் கவிதைத் தொகுதி வைகறை மேகங்கள் வெளிவந்தது. கதை- கவிதை- கட்டுரை என்ற வடிவங்களில் இதுவரை பதினெட்டு நூல்கள் எழுதியிருக்கிறார். இதுவரை 'நான்' என்ற பெயரில் இவர் தன் 28 வயதிலேயே சுயசரிதை எழுதியிருக்கிறார். உலகமொழிக் கவிதைகள் தமிழில் அறிமுகப்படுத்தும் இவரது எல்லா நதியிலும் என் ஓடம் என்னும் நூலை அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். பரிசு பெற்ற கவிராஜன் கதை என்ற பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் புதுக்கவிதையில் எழுதப்பட்டிருப்பது தமிழிலக்கியத்தில் முதல் முயற்சி. இவரது பல நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.
                                                    
1980-ல் நிழல்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜா இவரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். 1981-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் விருது வழங்கப் பெற்றார்.
1985-ம் அண்டு முதல் மரியாதை படத்தில இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு அகில இந்திய சிறந்த பாடலாசிரியர் என்று அளவில் ஜனாதிபதியின் தேசிய விருதைப் பெற்றுத் தந்தன. பின்னர் ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்கும் இவருக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். மேலும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட கலை இலக்கிய அமைப்புகளும். மன்றங்களும். பத்திரிகைகளும் ஆண்டுதோறும் சிறந்த பாடலாசிரியராக இவரைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கியுள்ளன. நட்பு திரைப்படத்தின் மூலம் கதை- வசனகர்த்தாவாக அறிமுகமானார். நட்பு ஓடங்கள் வண்ணக்கனவுகள். அன்றுபெய்த மழையில் ஆகிய படங்கள் இவர் வசனம் எழுதியவைகளில் சிறப்பு பெற்ற படங்களாகும். 1986-ஆம் ஆண்டில் சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தால் கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு கவியரசு என்னும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார். இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் இவர் ரஷ்ய நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1987-ஆம் ஆண்டு ரஷ்யா சென்று வந்தார். தமிழ் அமைப்புகள் அழைப்பின்பேரின் அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ள இவர். மேலும் மலேசியா. சிங்கப்பூர். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

1 கருத்து: